மிளகாய்ப் பொடி தூவி ரூ.15 லட்சம் கொள்ளை: இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பருப்பு மண்டி ஊழியர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
Updated on
1 min read

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பருப்பு மண்டி ஊழியர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.இது குறித்து மாநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பருப்பு மண்டி ஊழியர் முருகேசன் கடந்த மாதம் 10-ம் தேதி பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது லீ பஜார் ரயில்வே கேட் பகுதியில் வைத்து அவர் மீது மிளகாய்ப் பொடியை வீசிய கும்பல், முருகேசனிடம் இருந்து ரூ.15.23 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்த விசாரணையில் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த க.சுப்பு (எ) சிவசுப்பிரமணியம் (27), தாசநாயக்கன்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த ஆ.வீரராகவன் (27), இவர்களது கூட்டாளிகள் முரளி, கார்த்திக், அமிர், நவீன் ஆகியோருடன் சேர்ந்து முருகேசனிடம் பணத்தைக் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த 14-ம் தேதி சிவசுப்பிரமணியம், வீரராகவன் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிவசுப்பிரமணியன் கடந்த ஆண்டு மே மாதம் ஓசூர் பகுதியில் மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து ஒரு டிப்பர் லாரியையும், ஜூன் மாதத்தில் டாரஸ் லாரியைத் திருடியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரராகவன் கடந்த 2012-ம் ஆண்டில் அன்னதானப்பட்டி பகுதியில் நடைபெற்ற கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

வீரராகவன், சிவசுப்பிரமணியன் இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்படி ஓராண்டு சிறையில் அடைக்கும்படி பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர், மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜூக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஏ.அமல்ராஜ், சனிக்கிழமை உத்தரவிட்டார். சிறையில் உள்ள இருவரும் உத்தரவின் நகல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com