

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பேசுவோர் பேசிவிட்டு போகட்டும், காங்கிரஸ் கட்சியின் இலக்கு 275 தொகுதிகளை நோக்கி உள்ளது என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன்.
கடலூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது. பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
அதேபோல பால் கொள்முதல் விலை உயர்வு, கோமாரிநோயால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகதீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போராட்டத்தில் பாலை தரையில் கொட்டும் முடிவை உற்பத்தியாளர்கள் கைவிட வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் குற்றச்சாட்டை இந்தியாவில் உள்ள எந்த இயக்கமும் ஏற்கவில்லை. அரசியல் லாபத்துக்காகவும், சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும் இந்த பிரச்சினையை அவர்கள் கையில் எடுத்துள்ளதாக அனைத்து கட்சிகளும் கருதுகின்றன. எனவே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கும், விளம்பரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடாது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய அல்லது மாநில கட்சிகளில், கட்சிகளுக்குள்ளேயோ, தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. நேற்று உருவான ஆம்ஆத்மி கட்சியிலும் கூட பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து விடப்பட்டு உள்ளதாக கூறப்படுவது சரியானதல்ல. கடந்த 2004, 2009-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியை பிடித்தது.
அதேபோன்று இந்த ஆண்டு (2014) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணி அமைக்கும். இதில் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி பற்றியும் அதில் சேரும் கட்சிகள் குறித்தும் தலைமை அறிவிக்கும்.
தேசிய இயக்கமான காங்கிரஸ் 2004-ல் 140, 2009-ல் 205 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது, 2014-ல் 275 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 40 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பேசுவோர் பேசிவிட்டு போகட்டும், காங்கிரஸ் கட்சியின் இலக்கு 275 தொகுதிகளை நோக்கி உள்ளது.
இந்திய-இலங்கை மீனவர்கள் இடையே சுமுகமான தீர்வு காண முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து உள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி அவர்களது படகுகளை கைப்பற்றுவது கைது செய்வது ஆகியவை பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.
இலங்கை கடற்படையினரின் செயலை தடுத்து நிறுத்தவேண்டும் என இலங்கை அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். முன்னாள் எம்பிபிஆர்எஸ்.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், நகரதலைவர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.