ஆரணியில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் திங்கள்கிழமை இரவு 25 சவரன் நகைகள் மற்றும் பணம் ரூ.10ஆயிரம் திருடிச்சென்றுள்ளனர்.
ஆரணி சைதாப்பேட்டை 25வது வார்டு கவுன்சிலர் எஸ்.ஜோதிலிங்கம் என்பவர் அதிமுக கட்சியில் நகர அவைத்தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இவரது மனைவி சுலோசனா புனித யாத்திரைக்காக காசிக்கு சென்றுள்ளார். இதன் காரணமாக சுலோசனா அவரது நகைகளை கழற்றி வீட்டிலிருந்த பீரோவில் வைத்துவிட்டுச்சென்றுள்ளார்.
இந்நிலையில் கவுன்சிலர் எஸ்.ஜோதிலிங்கம் வீட்டை பூட்டிக்கொண்டு பிப் 24 திங்கள்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த செயின், நெக்லஸ் என 25 சவரன் நகைகளும், ரூ.10ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது.
இதனையடுத்து ஜோதிலிங்கம் ஆரணி நகர போலீஸில் புகார் கொடுத்தார். இதனால் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.