தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் அருகே கடல்நீர் உட்புகுந்து 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு!

சிதம்பரம் அருகே வடக்குபிச்சாவரத்தில் உப்பனாறு வழியாக கடல்நீர் கிராமங்களில் உட்புகுந்து சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலைக்கு

News image
Updated On :5 ஜனவரி 2014, 12:37 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வடக்குபிச்சாவரத்தில் உப்பனாறு வழியாக கடல்நீர் கிராமங்களில் உட்புகுந்து சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடக்குப்பிச்சவரம், நடுப்பாளையம், திருக்கழிப்பாலை, தெற்குபிச்சாவரம், திருவாசலடி, இளந்திரைமேடு, கனகரப்பட்டு, உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றி உப்பனாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வழியாக தான் கடலூர், பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் வீராணம் ஏரிக்கு வந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலில் கலக்கிறது.

இந்நிலையில் மழை குறைவாக உள்ள ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உப்பனாற்றில் அதிகம் தண்ணீர் செல்லாததால் கடல்நீர் எதிர்த்து வந்து உப்பனாறு வழியாக மேற்கண்ட கிராமங்களில் உள்ள 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட விளை நிலங்களை சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் செய்த சம்பா நெற்பயிர்கள், மணிலா பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உப்புநீரை குடிக்கும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

உப்புநீர் கிராமங்களை சூழ்ந்துள்ளதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரும், உப்பு நீராக மாறியுள்ளது.  இதனால் மக்கள் நல்ல குடிநீருக்கு அவதியுறும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் தடுப்பணை கட்ட வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் நிதி வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் தற்காலிகமாக உப்பனாற்றில் அருகில் இருக்கும் மண்னை எடுத்து ஒரு தடுப்பு அணை கட்டுகின்றனர். பின்பு அதனை மழைக் காலங்களில் உடைத்து விட்டு வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் தற்காலிக தடுப்பணையை கட்டிவருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிதம்பரம் வட்டச் செயலாளர் கண்ணன் தெரிவித்தது:

உப்பனாறு வழியாக கடல்நீர் வயல்களுக்கு வராமல் நிரந்தரமாக தடுக்க ஷட்டர் வசதியுடன் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டு காலமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்ட அரசிடம் போதிய நிதி இல்லை என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் பேசியுள்ளார். இந்த பகுதி உள்ள கிராமங்களில் உப்புநீர் உட்புகுவதால் வீடுகள் அரிப்பு எடுத்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி விரைவில் ஷட்டர் வசதியுடன் கூடிய தடுப்பனை ஒன்றை வடக்கு பிச்சாவரத்தில் உள்ள உப்பனாற்றில் கட்ட வேண்டும் என்கிறார் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.