விருதுநகர் மாவட்டத்தில் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஜன-19ம் தேதி நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக சுகாதார துணை இயக்குநர் சண்முகசுந்தரம் கூறியாதவது: விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 61,633 குழந்தைகளுக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 1,03,053 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது. இதில், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 581 மையங்களிலும், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 487 மையங்களிலும் என மொத்தம் 1068 மையங்களில் வழங்கபட இருக்கிறது. பெரும்பாலும் இம்முகாம்கள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள் மற்றும் திருக்கோயில் தலங்களில் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருக்கிறது.
அதேபோல், இம்மாவட்டத்தில் 33 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்கள் ஆகிய இடங்களில் 46 சிறப்பு குழுக்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.