சேலத்தில் விலை உயர்ந்த பைக்குகளை திருடிய பிரபலங்களின் வாரிசுகள் கைது

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடியதாக முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Updated on
2 min read

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடியதாக முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் மாநகர காவல் உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் பால்பாண்டி ஆகியோர் தலைமையிலான போலீஸார், ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது, ஒரு பைக்கில் வேகமாக வந்த 17 வயது சிறுவனைப் பிடித்து விசாரித்துள்ளனர். இதில் அந்த பைக் அஸ்தம்பட்டி பகுதியில் திருடப்பட்டது என்பது தெரிய வந்தது.

 மேலும் அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் என்பதும் அவரது தாத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.

 அந்த சிறுவனும் பேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அவருடன் பிளஸ்-2 பயின்ற மேலும் இரு சிறுவர்களும் சேர்ந்து அஸ்தம்பட்டி பழனியப்பா நகரைச் சேர்ந்த சையது நஸ்ருதீன் என்பவருக்கு சொந்தமான பைக்கை கடந்த ஜூன் 22-ம் தேதி திருடியுள்ளனர்.

 இதைத் தொடர்ந்து கடந்த 15 நாள்களுக்கு முன்பு சீரங்கபாளையத்தைச் சேர்ந்த இம்ரான்கான் (24) என்ற எம்.பி.ஏ. பட்டதாரியின் பைக்கையும் திருடியுள்ளனர். வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பைக் இம்ரான்கானுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.

 மேலும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட மற்றொரு 17 வயது சிறுவன், சேலம் சீரகாபாடியைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவன உரிமையாளரின் பேரன் என்பது தெரிய வந்துள்ளது. மற்றொருவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன். இதையடுத்து மற்ற இருவரையும் தேடிப் பிடித்த போலீஸார், அவர்களிடம் இருந்து மேலும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

 அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379-ன் கீழ் (திருட்டு) வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மூவரும் சேலம் 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இது குறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் கூறியது:

 கைது செய்யப்பட்டுள்ள 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் மூவரும் பள்ளி வகுப்பு நண்பர்கள். விலையுயர்ந்த பைக்குகளைத் திருடி விற்று, அதன் மூலம் சொகுசாக வாழ இவர்கள் ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 விலையுயர்ந்த பைக்குகள் உள்ளிட்ட மூன்று பைக்குகளை ஆட்டோ மூலம் சென்று திருடியுள்ளனர்.

 அதில் ஒரு பைக்கை சென்னையில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பயிலும் தனது நண்பரிடம் கொடுத்து விற்க முயன்றுள்ளனர். அந்த பைக்கையும் மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. வாகனத் திருட்டு குறித்து தங்களுக்கு அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக வாகன சோதனை நடத்தப்பட்டதிலேயே 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையர் கூறியுள்ளார்.

  சேலத்தைச் சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள் வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com