மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணையை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, டிரைவர் ஜான்பிரைட் ஆகியோர் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த டாரஸ் லாரியை நிறுத்த சைகை காட்டினர். லாரி நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று, இரவிபுதூர்கடை பகுதியில் வைத்து லாரியை மடக்கிப் பிடித்தனர். டிரைவர் தப்பியோடிவிட்டார்.
தொடர்ந்து லாரியை சோதனையிட்ட போது லாரியின் முன் பகுதியில் ஓட்டுநரின் இருக்கை அருகில் மொத்தம் 21 கேன்களில் 1,000 லிட்டர் மண்ணெண்ணை பதுக்கி வைத்திருந்ததும், அவை மீனவர்களுக்கு மானிய விலையில் அரசு வழங்கிவரும் மண்ணெண்ணெய் என்பதும் தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட டாரஸ் லாரி மற்றும் மண்ணெண்ணெய்யை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.