பாஜக கூட்டணியில் கொள்கை இல்லாத கட்சிகள்: முன்னாள் அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம்

திமுக தலைவர் கருணாநிதி 92 வயதிலும் சக்கர நாற்காலியில் இருந்து பம்பரம் போல சுழன்று மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் 66 வயதான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் மக்களை சந்தித்து
Updated on
1 min read

பாஜக கூட்டணியில் கொள்கை இல்லாத கட்சிகள் தான் இருக்கின்றன என்றார் முன்னாள் அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம். கடலூர் சட்டமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.

இதில் கலந்துகொண்ட மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி 92 வயதிலும் சக்கர நாற்காலியில் இருந்து பம்பரம் போல சுழன்று மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் 66 வயதான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் மக்களை சந்தித்து வருகிறார். அவரது கடலூர் வருகைக்காக அண்ணா விளையாட்டு மைதானத்தை பாழாக்கி ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அமைத்து இருக்கிறார்கள். புழுதி பறக்க கூடாது என்பதற்காக ரூ.1 கோடி செலவில் விரிவாக்கம் செய்துள்ளார்கள். இது கட்சி பணமா அரசு பணமா என தெரியவில்லை. தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என தெரியவில்லை.

அதேபோல சிதம்பரத்தில் தனியார் இடத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பணம் என்றால் தனியார் இடத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க அனுமதிக்கலாமா தனியார் இடம் என்றால் பொதுப்பணித்துறையினர் அங்கு வேலை செய்யலாமா . இதையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மின்சாரத்தை பற்றி பேச அதிமுகவுக்கு தகுதி இல்லை. 3 ஆண்டு கால ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்கள். கடலூரில் பாதாள சாக்கடை திட்டம், விருத்தாசலம் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் போன்ற பணிகள் இன்னமும் முடிக்கப்படவில்லை.ரயில்வே சுரங்கப்பாதை பணி நடைபெறும் பகுதியில் பாதை வசதி கேட்ட வியாபாரிகள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்குள்ள பொதுநல அமைப்புகள் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இன்னமும் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையவில்லை.

ஜெயலலிதா கூட்டணி கட்சியினரை மதிக்க மாட்டார். விஜயகாந்தின் வாக்குகள் மூலமாகத்தான் ஜெயலலிதா வெற்றிபெற்றார். சினிமாவில் தலையில் குல்லா அணிந்து முஸ்லீமாக நடித்த விஜயகாந்த் இன்று பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளார். அந்த கூட்டணியில் கொள்கை இல்லாத கட்சிகள் எல்லாம் கூட்டணியாக சேர்ந்துள்ளது. ஆனால் திமுக கூட்டணி கொள்கை உடைய கூட்டணி.தற்போது திமுகவுக்கு வாழ்வா சாவா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நாம் கடுமையாக உழைத்தால் 40 இடங்களையும் கைப்பற்றி விடலாம். நமது வெற்றி இந்த ஆட்சிக்கு அதிர்ச்சியைகொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், மாநில மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, அவைத்தலைவர் து.தங்கராசு, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி  மாவட்டசெயலர் தாமரைசெல்வன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com