நோட்டாவுக்கு 20 ஆயிரம் வாக்குகள்: சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சேலம் மக்களவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருப்பதை, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும்
Updated on
1 min read

சேலம் மக்களவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருப்பதை, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் சனிக்கிழமை கொண்டாடினர்.

 பொதுத் தேர்தல்களில் அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளர்களை விரும்பாத வாக்காளர்களும், வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (நோட்டா) என்பதை பதிவு செய்யும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. மேலும் கடந்த ஏற்காடு சட்டப் பேரவை இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே அதற்கான பொத்தான் வழங்கப்பட்டது.

 ஏற்காடு இடைத் தேர்தலின்போது, நோட்டாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு நோட்டாவுக்கு ஆதரவு திரட்டியிருந்தது.

 இந்த நிலையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் சேலம் தொகுதியில் நோட்டாவுக்கு 20,601 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல் தமிழகம் முழுவதும் தொகுதிக்கு சராசரியாக சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளன. இதையடுத்து தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தினர் அதைக் கொண்டாடும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை பட்டாசு வெடித்தனர்.

 மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஊழல் அரசியல்வாதிகளை எதிர்க்கும் விதமாக வாக்காளர்கள் இனி வரும் காலங்களிலும் தங்களது எதிர்ப்புகளை துணிந்து பதிவு செய்ய வேண்டும் என்று அமைப்பின் மாநிலத் தலைவர் பூமொழி கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com