திருவள்ளுவர் பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் ரூ.45 லிருந்து ரூ.85 ஆகவும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் ரூ.75 லிருந்து ரூ.150 ஆகவும் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இதனை கண்டித்து சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை காலை வகுப்புகளை புறக்கணித்து சிதம்பரம்-சி.முட்லூர் புறவழிச்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், கல்லூரி முதல்வர் வணங்காமுடி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படாததால், மறியல் செய்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கலைந்து சென்றனர்.