திருச்சியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைதான இளைஞரிடமிருந்து மேலும் 50 இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
கடந்த 14-ம் தேதி திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகேயுள்ள மருத்துவமனை முன்பு நின்ற இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞரை கன்டோன்மென்ட் போலீஸார் பிடித்தனர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தா.பேட்டை, மாவிலைப்பட்டியைச் சேர்ந்த தங்கதுரை (30), என்பதும், பிரபல இருசக்கர வாகன கொள்ளையன் என்பது தெரியவந்தது.
உறையூர் நெசாவாளர் காலனி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருச்சி மாநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார் என்பதும், திருடப்பட்ட வாகனங்கள் அனைத்தும் தா.பேட்டையிலுள்ள தனது வீட்டு பின்பகுதியில் நிறுத்தி இருந்ததும் தெரியவந்தது. திருடப்பட்ட வாகனங்களுக்கு போலி பதிவு எண் மற்றும் போலி சான்றிதல் தயாரித்து விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தங்கதுரை வீட்டை சோதனையிட்ட போது அங்கு செவிலியர் மாணவிகள் 2 பேர் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்த போது, இருவரும் மாயவரம், சிதம்பரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தங்கதுரை வீட்டில் இருந்த 50 இருசக்கர வாகனங்களையும், விலையுருந்த செல்போன்களையும் போலீஸார் மீட்டனர். தொடர்ந்து தங்கத்துரையிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.