தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் 15-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் கூறினார்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள அனைத்து 32,184 மாணவர்களுக்கும் வியாழக்கிழமை (ஜூன் 11) காலை 10.30 மணிக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும என்றும் அவர் தெரிவித்தார்.
ரேண்டம் எண் ஏன்?
பிளஸ் 2 தேர்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்களான உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றின் மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த தேதியின் அடிப்படையிலும் ஒரே பிறந்த தேதியயைக் கொண்டவர்கள் போன்ற மாணவர்களை தரவரிசைப் பட்டியலில் வரிசைப்படுத்தவே ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) ஒதுக்கப்படுகிறது.
இணையதளத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org
இல் வியாழக்கிழமை (ஜூன் 11) பிற்பகலில் தெரிந்து கொள்ள முடியும்.
தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். மறுகூட்டல், மறு மதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி.யை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் தேர்வுத் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அளிப்பதாகக் கூறியுள்ளது. சி.டி. கிடைத்தவுடன் மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் சேர்க்கப்பட்டு எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் இரண்டு நாள்களில் தயாரிக்கப்படும். எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று டாக்டர் உஷா சதாசிவம் கூறினார்.