வல்லநாட்டில் மர்ம நபர்களால் தென்னை வித்து பண்ணை காவலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதை தடுக்க வந்த ஏடிஎம் காவலாளிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (75). இவருக்கு 2 மகள் மற்றும் 5 மகன்கள் உள்ளனர். இவர் வல்லநாட்டில் உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி எதிரே உள்ள தென்னை வித்து பண்ணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.சனிக்கிழமை இரவு பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது இரு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் அதில் வந்து துரைபாண்டியை பெயரை கூறி அழைத்தனராம்.
இவர் அருகில் சென்றபோது அந்த 4பேரும் அவரை அரிவாளால் சரமாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அதே இடத்தில் உள்ள ஏடிஎமில் காவலாளியாக பணிபுரியும் நம்பிக்குறிச்சியைச் சேர்ந்த அழகய்யா மகன் உலகநாதன் (30) ஓடி வந்து தடுத்தார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த 4பேரும் தலைமறைவானர். இதில் காயமடைந்த துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே இறநதார். உலகநாதன் ஆபத்தான நிலையில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பெர்ணாண்டோ சேவியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தகவல் அறிந்து திருநெல்வேலி டிஐஜி சுமித்சரண், மாவட்ட எஸ்.பி . துரை. ஏடிஎஸ்பிக்கள் முரளிரம்பா, அருள்சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வல்லமாடு, மணக்கரை , முறப்பநாடு பகுதியில் பலத்த போலீஸார் போடப்பட்டுள்ளது. கொலையாளிகள் யாரென தெரியாததால் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஸ்ரீவைகுண்டம் , வல்லநாடு பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.