விருதுநகர் பகுதியில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக அரசு பேருந்துகளில் அரசு உத்தரவிற்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.முத்துராஜ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் அரசு நகர பேருந்துகளில் ரூ.9-க்கு பதிலாக ரூ.10 வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து நடத்துனரிடம் கேட்டால் சில்லரை தட்டுப்பாடு பிரச்னையின் காரணமாக ரூ.10 வசூலிப்பதாக கூறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பேருந்துகளின் கட்டணத்தை அரசுதான் நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அரசு போக்குவரத்து நிர்வாகமும், நடத்துனரும் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கு உரிமையில்லை.
அரசு போக்குவரத்து நிர்வாகம் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் நகர பேருந்துகளில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதில் பிரச்னை வந்தால் பின்வாங்குவதும், வராவிட்டால் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவி்த்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருகிறது. அரசு உத்தரவிற்கு மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.