புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை: ஹோட்டல் உரிமையாளர் கைது

திருச்சி அருகே புரோட்டா மாஸ்டரை கடப்பாரையால் அடித்துக்கொன்ற  ஹோட்டல் உரிமையாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

திருச்சி அருகே புரோட்டா மாஸ்டரை கடப்பாரையால் அடித்துக்கொன்ற  ஹோட்டல் உரிமையாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஜீயபுரம் அருகேயுள்ள குழுமணி வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் அலங்கராஜ் (55). அப்பகுதியிலுள்ள புளியமர பேருந்து நிறுத்தத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வாத்தலை அருகேயுள்ள சென்னக்கரை பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் சிவா(எ) சிவகுமார்(27)  என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் வேலை செய்து வந்த சிவகுமாருக்கு, அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிக்கொடுத்துள்ளார் அலங்கராஜ்.

இந்நிலையில் சிவகுமார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தான் வேலையிலிருந்து நிற்பதாக அலங்கராஜியிடம் தெரிவித்துள்ளார். அப்போது அலங்கராஜ் நான் வாங்கிக்கொடுத்த கடன் தொகையை திருப்பிக்கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பின்னர் கலைந்துச் சென்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு ஆத்திரம் தீராத அலங்கராஜ் கடையில் தூங்கிக்கொண்டிருந்த சிவகுமாரை கடப்பாரையால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சிவகுமாரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து அலங்கராஜை சனிக்கிழமை கைது செய்தனர்.

இறந்து போன சிவகுமாருக்கு ரேணுகா என்ற மனைவியும்,பவித்ரா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com