விவசாயக் கடன் தள்ளுபடி: மத்திய அமைச்சருக்கு சு.திருநாவுக்கரசர் கண்டனம்

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் எந்தத் திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர்
விவசாயக் கடன் தள்ளுபடி: மத்திய அமைச்சருக்கு சு.திருநாவுக்கரசர் கண்டனம்
Published on
Updated on
1 min read

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் எந்தத் திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் கூறியுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தில்லியில் 30 நாள்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒரு பொருட்டாகவே மத்திய அரசு கருதவில்லை. 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் எழுத்து மூலம் அளித்த பதிலில் விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யும் எந்தத் திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று கூறியுள்ளார். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. 

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2015-16-ஆம் ஆண்டில் ரூ.6.11 லட்சம் கோடி வரிச் சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று கடுமையாகக் கூறும் மத்திய பாஜக அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவதில் இத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றாதது ஏன்?

 தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசைத் தட்டிக் கேட்க தமிழக அரசு தயாராக இல்லை. இந்த அவலநிலையில் தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com