மெக்சிகோ: மெக்சிகோவின் கிழக்கு கடற்கரையில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் குறைந்தது 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் குயின்டானா ரூ என்ற சுற்றுலா தலங்கள் அதிகம் கொண்ட பகுதி உள்ளது. இந்த நிலையில், கோஸ்டா மாயா என்ற பேருந்து நிறுவனத்தின் பேருந்து ஒன்று 31 பயணிகளை ஏற்றி கொண்டு இந்த பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளது.
இந்த பேருந்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அவர்கள் பழங்கால மாயன் வம்சத்தினர் ஆட்சி செய்த துலும் என்ற சுற்றுலா பகுதியில் உள்ள சாச்சோபென் என்ற தொல்லியல் பகுதியை நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானது. இதில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்வர்கள் அனைவரும் பஜலார் மற்றும் சேதுமலில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பினர். இந்த விபத்து ஏற்பட்டது பற்றி விசாரணை நடைபெற உள்ளது. காயமடைந்தவர்களில் 7 பேர் அமெரிக்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
"இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட்டுள்ள அனைவருக்கும் நாங்கள் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் "நாங்கள் உள்ளூர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டுள்ளோம் மற்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு நிலைமையை கண்காணித்து வருகிறோம்" தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் குடிமகனாக உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு உதவுவதற்காக மெக்சிகோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகள் இந்த இடத்தை அடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவேர்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் குயின்டானா ரூ பகுதியில் கான்கன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.