

லக்னௌ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என காங்கிரஸ் துனைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் முதல் முறையாக கூட்டாக செய்தியாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 8-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை, மார்ச் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மாநிலத்தை ஆளும் சமாஜவாதிக் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது.
இதன்படி, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் சமாஜவாதிக் கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதுதொடர்பான அறிவிப்பை, உத்தரப் பிரதேச மாநில சமாஜவாதி தலைவர் நரேஷ் உத்தமும், மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பரும் கடந்த 22-ஆம் தேதி கூட்டாக வெளியிட்டனர்.
இந்நிலையில், கூட்டணி அமைந்த பின்னர் அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் முதல் முறையாக கூட்டாக செய்தியாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின் போது அகிலேஷ் யாதவ் பேசுகையில், காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்திருப்பது மாநில வளர்ச்சிக்காக மற்றும் மக்கள் நலனுக்காக, பிரிவினைவாத அரசியல் செய்பவர்களுக்கு இக்கூட்டணி பதிலடியாக இருக்கும். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியானது சைக்கிளில் உள்ள இரண்டு சக்கரங்கள் போல இருக்கும். ராகுல் காந்தியும், நானும் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வோம் என கூறினார்.
காங்கிரஸ் துனைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி கங்கா மற்றும் யமுனா நதிகளை போன்றது. இக்கூட்டணியில் இருந்து சரஸ்வதி எனும் நதி வளர்ச்சியாக வெளிப்படும். இரு கட்சிகளிடையே வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலின் போது ஒற்றுமையாக இருப்பதற்கான காரணங்களும் அதிகம் உள்ளது. சோனியா காந்தி மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரது பிரச்சாரத் திட்டங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்தக் கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும், வரும் நாடாளுமன்றத்தேர்தலிலும் இக்கூட்டணி தொடர்வதற்கான காரணங்கள் வெளிப்படையான விவாதத்தில் தான் இருக்கிறது. சகோதரி பிரியங்கா காந்தி எப்போதும் எனக்கு உதவியாக பிரச்சாரத்தில் இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் கருத்துக்கள் ஒப்பீட்டளவில் ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை விட தீங்கு அளிக்கவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் இருவரும் லக்னோவில் பேரணியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.