வாஷிங்டன் : அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்று அலாஸ்கா மாகாணத்தில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
வட அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில், கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் டேனலி தேசிய பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். போலந்து நாட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் விமானி உள்பட 5 பேர், சிறிய ரக விமானத்தில் டேனலி தேசிய பூங்காவிற்கு பயணம் செய்தனர்.
கடல் மட்டத்தில் இருந்து தண்டர் மலை என்று அழைக்கப்படும் ரிட்ஜ் மலை உச்சியில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக திடீரென விபத்துக்குள்ளானது. இதில், 4 சுற்றுலா பயணிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காணாமல் விமானி பற்றிய தகவல் ஏதுவும் கிடைக்காத நிலையில் அவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
விபத்து நிகழ்ந்த பகுதியில் வெப்பநிலை மைனஸ் 17.7 டிகிரிக்கும் கீழ் இருப்பதாலும், தாழ்வான மேக மூட்டங்களால் மீட்புப்பணிகளில் துரிதமாக செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏராளமான வியாபார நிறுவனங்கள் ஒவ்வொரு வசந்தகாலங்கள் மற்றும் கோடைகாலங்களில் பொதுமக்களுக்கு ஏராளமான பொழுதுபோக்கு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து தருகின்றன.