பந்திப்போரா: ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போராவில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பதுங்கி உள்ள மேலும் 2 பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டம் ஹஜின் என்ற இடம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த என்கவுன்டரில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், பதுங்கி உள்ள மற்ற பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்பகுதியில் 3 முதல் 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது.
நேற்று அனந்த்நாக் மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி உள்பட இரு பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். அதையடுத்து சில மணி நேரத்தில் சோபியான் மாவட்டத்தின் அரஹாமா பகுதியில், வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த போலீஸாரை பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில், சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் இஷ்பாஃக் அகமது மிர், ஜாவீது அகமது பட், முகமது இக்பால் மிர் மற்றும் அடில் மன்சூர் பட் ஆகியோர் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.
முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தின் முனிவார்ட் கிராமத்தில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி அல்தாஃப் அகமது தார் என்னும் அல்தாஃப் கச்ரோ மற்றும் ஒமர் ரஷித் வானி ஆகிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.