சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் முன் ஜாமீன் கோரி சசிதரூர் மனுத் தாக்கல்

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் முன் ஜாமீன் கோரி,
சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் முன் ஜாமீன் கோரி சசிதரூர் மனுத் தாக்கல்
Updated on
1 min read

புதுதில்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் முன் ஜாமீன் கோரி, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெகர் தராருடன் சசிதரூருக்கு தொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பான தகராறில் சுனந்தா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. முதலில் சந்தேகத்துக்குரிய வழக்காக இதனை விசாரித்து வந்த போலீஸார், கடந்த 2015 ஜனவரி 1-ஆம் தேதி கொலை வழக்காகப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில், தில்லி காவல் துறை கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 3,000 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையில், சசி தரூர் ஒருவர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதால், அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும் என்று தில்லி காவல் துறை தெரிவித்தது. 

வழக்கில், சசி தரூரின் வீட்டுப் பணியாளர் நாராயண் சிங் முக்கிய சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார். சசி தரூர் மீது மனைவியை கொடுமைபடுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தில்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசி தரூருக்கு அழைப்பாணை அனுப்பலாமா? வேண்டாமா? என்பது குறித்து, வரும் ஜூன் 5-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி சசி தரூர்க்கு அழைப்பானை அனுப்பப்பட்டது. 

மே 14-ஆம் தேதி இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறி சசி தரூர் மீது தில்லி காவல்துறை 306 மற்றும் 498ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இருப்பினும் இது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட வழக்கு என்று சசி தரூர் பதிலளித்தார்.

அதுபோல, சசி தரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் இந்த வழக்கு தொடர்பாக அரசியல் தலைவர்களுக்கான நீதிமன்றத்துக்கு தில்லி நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதன் விசாரணை மே 28-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த வழக்கு தொடர்பாக ஜுலை 7-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசி தரூர்க்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கோரி சசி தரூர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com