ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கல்லணைக் கால்வாயில் உடைப்பு: தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉழூரில் கல்யாண ஓடைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வெளியேறுவதால்

News image
Updated On :8 அக்டோபர் 2018, 3:04 pm IST


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉழூரில் கல்யாண ஓடைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வெளியேறுவதால் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉழூரில் கல்லணைக் கால்வாயின் கிளைக்கால்வாயான கல்யாண ஓடை உள்ளது. இந்த ஓடையில் பாசனத்துக்காகத் தண்ணீர் சென்றுகொண்டுள்ள நிலையில், ஓரிடத்தில் மரம் சாய்ந்ததால் இடதுபுற கரையில் சுமார் 8 மீட்டர் அளவில் உடைப்பு ஏற்பட்டு அந்த வழியாகத் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால் மேலஉழூர், பரிதியப்பர் கோவில், கண்ணந்தங்குடி, ஆழியவாய்க்கால், தும்பச்சிக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, பருத்திக்கோட்டை, கீழ உளூர்பொன்னாப்பூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஊர்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

உடைப்பு வழியாகப் பாயும் தண்ணீர் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் பாய்வதால் அந்த வழியாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கரையை அடைப்பதற்கான மணல் மூட்டைகள், சவுக்குக் கம்புகள் ஆகியன கொண்டுவரப்பட்டுள்ளன. தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையின் 36 வீரர்களுடன் வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கால்வாயில் தண்ணீரை நிறுத்தியபின்பே கரையை அடைக்கும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

தற்போது சம்பா நடவுப்பணிகள் முடிந்து 15 நாட்கள் முதல் 30 நாட்களே ஆன நிலையில், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வெளியேறுவதால் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.