புது தில்லி: ராகுலின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய்மாக்கான் தனது கட்சி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் தவறானவை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், கடந்த 2012-இல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் அஜய்மாக்கான்(54). பின்னர் காங்கிரஸ் பொதுசெயலராகவும் இருந்து வந்தார். பின்னர் கடந்த 2015 முதல் தில்லி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அஜய் மக்கான், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல இருப்பதாகவும், இதனால், தில்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இவரது ராஜிநாமாவை ராகுல் இதுவரை ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சில ஆங்கில தொலைக்காட்சிகளிலும் இந்த செய்திகள் ஒளிபரப்பாகின.
இந்நிலையில், தில்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அஜய் மக்கான் ராஜிநாமா செய்யவில்லை என்று காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அவருக்கு உடல் நலனில் சில பிரச்னைகள் இருப்பதகாவும், இதற்காக பரிசோதனைக்கு சென்றுவிட்டு, விரைவில் திரும்புவார் என்றும் கட்சி பணியில் தொடருவார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.