மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. மும்பையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு திரையுலகப் பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயின் ஜுமைரா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த போது திடீரென உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில், அவரது கணவர் போனி கபூரிடம் விசாரணை அதிகாரிகள் விளக்கம் பெற்றனர்.
விசாரணை முழுமையாக நிறைவடைந்தாகவும், ஸ்ரீதேவி மரணம் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்படுவதாகவும் நேற்று மாலையில் துபாய் அரசு தெரிவித்தது. இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் நேற்று இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அனில்கபூர் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீதேவியின் உடலுக்கு நடிகர் சல்மான்கான் உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் இரவு முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீதேவி வீட்டின் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது உடலைக் காணத் திரண்டிருந்தால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மும்பை மேற்கு அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பிற்பகல் 12.30 மணி வரை ஸ்ரீதேவி உடல் வைக்கப்படுகிறது. அதன்பின்னர் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் விலே பார்லே சேவா சமாஜ் எரியூட்டு மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.