புதுதில்லி: மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் தில்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி (66) சுவாசப் பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தபோதிலும், அவை எதுவும் பலனளிக்காமல் மருத்துவமனையில் நேற்று சனிக்கிழமை காலமானார்.
பண்பட்ட, நாகரிகமிக்க அரசியல் தலைவராக விளங்கிய ஜேட்லியின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று காலை தில்லி பாஜக தலைமையகத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டது. அவரின் உடலுக்கு இன்று காலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அரசியல் தலைவர்கள் பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து மறைந்த அருண் ஜேட்லியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, தில்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.