
லக்னெள: பிரியங்கா காந்தியை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது உத்தரபிரதேசத்தில் நடைபெற்றும் வரும் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது என ராகுல் காந்தி தனது
கண்டத்தில் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா எனும் இடத்தில் கடந்த 17 ஆம் தேதி இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா பகுதிக்கு சென்றார்.
வாரணாசி அருகேயுள்ள நாராயண்பூர் எனும் இடத்தில் பிரியங்கா சென்றபோது அவரது காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இங்கு நீங்கள் வர அனுமதி இல்லை என்றும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை கூறி போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
உடனடியாக பிரியங்கா காந்தி மற்றும் வந்தவர்கள் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பிரியங்கா காந்தி மற்றும் அவருடன் தர்ணாவில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இந்நிலையில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா? என யோகி ஆதித்யநாத் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் சென்ற பிரியங்காவை தடுத்து நிறுத்திய சம்பவம் யோகி ஆதித்யநாத் அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்றும் சட்டமீறலாக பிரியங்காவை போலீஸார் கைது செய்திருப்பது வேதனை அளிக்கிறது.
இதன் மூலம் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது என்றும், தன்னிச்சை அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் ராகுல் தனது கண்டன செய்தியில் குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.