பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை அடுத்த கடற்கரை நகரான மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னைக்கு அடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க கடற்கரை நகரான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வரும் அக்டோபர் மாதத்தில் சந்திக்க உள்ளனர். இந்தியா-சீனா இடையிலான இரண்டாவது மாநாட்டையொட்டி இந்த சந்திப்பு நிகழ வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 11, 13 ஆகிய 2 நாட்கள் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். “இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்காக, நாடு முழுவதும் பல பாரம்பரிய நகரங்களை சோதனை செய்துள்ளன மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் குழு. அதனை சீன அதிகாரிகளும் பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறும் என்பதை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு குறித்த ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு இடையே இரு தலைவர்களும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்ட மாமல்லபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சிற்பங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் பார்வையிட பிரதமர் மோடியும் சீன அதிபரும் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடியும், சீன அதிபரும் ஷி ஜின்பிங்கும் இடையிலான முதலாவகு சந்திப்பு சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்றது. அப்போது சர்வதேச நிலைமைக்கு ஏற்ப, இருநாட்டு உறவுகளை மேம்படுத்து என முடிவு செய்தனர். சந்திப்பை தொடர்ந்து இந்தியாவுக்கு வருமாறு ஷி ஜின்பிங்கிற்கு மோடி அழைப்பு விடுத்தார். பின்னர், இருவரும் அங்குள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். இது டோக்லாம் நிலைப்பாட்டிற்குப் பிறகு இருதரப்பு உறவுகளை மேம்படுத்திய பெருமைக்குரியது.