
ரயில்வே துறையில் காலியாக உள்ள ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணியாளர் என 62,907 பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகோ தெரிவித்துள்ள கண்டனம் செய்தியில், ரயில்வே துறையில், காலியாக உள்ள ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெற்றது.
62,907 பணியிடங்களுக்கான இத்தேர்வில், மதுரைக் கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் பலர் இத்தேர்வில் கலந்துகொண்டபோதும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.
திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் தொழிற் பழகுனர் தேர்விலும் வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
அதேபோல தற்போதும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதாகத் தெரிய வருகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.