புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 20 ஆக உயர்ந்துள்ளதாக ஜிடிபி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன."பலத்த காயங்களுடன் 189 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நிகழ்ந்த வன்முறையால் இறப்பு எண்ணிக்கை 13 ஆக இருந்த நிலையில், வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக வடகிழக்கு மாவட்டத்தின் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நேற்று மாலை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.
தலைநகரில் இயல்புநிலையைக் கொண்டுவருவதற்கான பொறுப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து வன்முறை நடைபெற்ற பகுதிகளை நள்ளிரவில் அஜித் தோவல் ஆய்வு செய்தார்.
பின்னர் சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், சந்த்பாக் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தவர், அங்கு பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் தலைநகரில் நிலவும் நிலைமை குறித்து தோவல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளிக்க வாய்ப்புள்ளது என்றும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.