நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 76 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயங்கத் தொடங்கின.
கரோனா பொது முடக்கத்தால் கடந்த 75 நாட்களுக்கு மேலாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஜூன் 1 ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட்ட போதும் தனியார் பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை. குறைவான எண்ணிக்கையில் பயணிகளை அழைத்துச் சென்றால் வருவாய் இழப்பு நேரிடும் என தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை முதல் இயக்குவதற்கு அனுமதி வழங்கினர். அதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை 168 தனியார் பேருந்துகள் மண்டலத்திற்குள் இயக்கப்பட்டன. 60% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் முக கவசம் அணிந்து தங்களது பணியை மேற்கொண்டனர்.