அம்பாசமுத்திரம்: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரக பகுதியில் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி விளைநிலங்களையும் வீட்டு விலங்குகளையும் தாக்கி வந்தன. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் மா, பலா, தென்னை, உள்ளிட்ட பயிர்களை மிகவும் சேதப்படுத்தி வந்தன.
இது குறித்து வனத்துறைக்கு புகார் வந்ததையடுத்து துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் கண்காணித்து கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர். இதையடுத்து ஏப்ரல் 29 முதல் ஜூன் 16 வரை நான்கு கரடிகள் சிக்கின.
இந்நிலையில், மீண்டும் பங்களா குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் ஐந்து வயது மதிக்கத்தக்க கரடி ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து துணை இயக்குநர் கொங்கு ஓங்காரம் தலைமையில் வன சரகர் நெல்லை நாயகம், வனவர் முருகசாமி, வனக்காவலர்கள், வனக் காப்பாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கூண்டில் சிக்கிய கரண்டியை முண்டந்துறை வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து கடையம் பகுதியில் கரடிகள் கூண்டில் சிக்குவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.