விழுப்புரம்: மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கான எந்தச் சலுகையும் பாதிக்கும் வகையில் செயல்படாது என்று தமிழக பாஜக மாநில செயலாளர் கே. டி. ராகவன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் கே.டி. ராகவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் எல்லைப் பகுதியை அந்நியர் வசம் ஒருபோதும் அனுமதிக்காது. சீன எல்லையில் போர் பதற்றம் தணிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் இந்த ஓராண்டு காலத்தில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு, விவசாயிகளுக்கான இரட்டிப்பு வருமானம் ஏற்படுத்த நடவடிக்கை, அரசின் சலுகைகள் நேரடியாக பயனாளிகள் சென்றடைய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்தியாவில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதற்கு பிறகு பொருளாதார மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரூ.21 லட்சம் கோடியில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிறு தொழிலுக்கு மூன்று லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுதந்திரத்துக்குப் பிறகு எப்போதும் இல்லாத வகையில் 500 பில்லியன் டாலர் அன்னியச் செலாவணி கையிருப்பில் உள்ளது. அந்நிய முதலீடாக 50 பில்லியன் டாலர் நிகழாண்டு வந்துள்ளது.
சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன் வந்துள்ளனர்.
கரோனா பாதிப்புக்கு, அரிசி பருப்பு பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ரூ.2000 நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கி கணக்கில் மூன்று மாதம் ரூ.500 வழங்கப்பட்டுள்ளது. சிறுதொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இன்றி கடன் வழங்கப்படுகிறது. சாலையோர தொழிலாளர்களுக்கும் ரூ.10,000 கடனுதவி வழங்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும். மின்சார திருத்த சட்டம் குறித்து கருத்து தான் கேட்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு சலுகையும் பாஜக அரசு பறிக்காது.
கரோனா தடுப்பு பணியில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை தவிர்த்து விட்டு ஆலோசனை கூறவேண்டும் என்று ராகவன் கூறினார்.