பேராவூரணி அருகே காதலனுடன் மகள் சென்றதால் தந்தை தற்கொலை
பேராவூரணி: பேராவூரணி அருகே காதலனுடன் மகள் சென்றதால், மனமுடைந்த தந்தை சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கீழ புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையா(54) விவசாயி, இவரது ஒரே மகளை பக்கத்து கிராமமான கட்டையங்காட்டை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தார்.
இந்நிலையில், வீரையாவின் மகளை காதலித்து வந்த கீழ புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வீரையாவின் மகளை அழைத்துச் சென்று விட்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு வீடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் வீரையா கடந்த 12-ஆம் தேதி புகார் செய்தார். காவலர்கள் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், காதலுடன் செல்வதில் வீரையா மகள் உறுதியாக இருந்தார். இதனால் மனமுடைந்த வீரையா காவல்நிலையத்தில் இருந்து வேதனையுடன் வெளியேறிய நிலையில் காணவில்லை.
இந்நிலையில் கீழ புனல்வாசல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சிதைந்த நிலையில் வீரையாவின் சடலம் கிடந்தது. கடந்த 12 -ஆம் தேதியே வீரையா சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மகள் எடுத்த முடிவால், மனமுடைந்த தந்தை சுடுகாட்டிற்கே சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பேராவூரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.