கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள சின்னபரூர் கிராமத்தில் 2 வீடுகளில் 66 பவுன் நகை, சுமார் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள சின்னபரூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலமுருகன் (40) தேவேந்திரன் (60) விவசாயிகளான இவர்களது வீடுகள் அருகருகே அமைந்துள்ளன. சனிக்கிழமை இரவு காற்றுக்காக வீட்டின் வெளியே குடும்பத்தினர் படுத்து தூங்கி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோ சேதப்படுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதில், பாலமுருகன் வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ஐந்தரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவையும், தேவேந்திரன் வீட்டில் 16 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மங்கலம்பேட்டை காவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ அபிநவ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.