சாயல்குடி : சாயல்குடி அருகே பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்கக்கோரி வயல்களில் இறங்கி பட்டா அடங்கல் சான்றுடன் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எம் கரிசல்குளம் கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள தங்களது விளைநிலங்களுக்கு கடந்த 2018 -19 ஆம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் காப்பீடு செய்துள்ளனர். இதற்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை தற்போதுவரை கிடைக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்
பிள்ளையார்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு காப்பீடு செய்த இழப்பீடு தொகை வழங்கப்படாததால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்திற்கு காப்பீடு செய்துள்ள பட்டா அடங்கல் சான்றுகளுடன் தங்களது வயல்களில் இறங்கி சமூக இடைவெளியுடன் முககவசங்கள் அணிந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிர் இன்சூரன்ஸ் காப்பீடு செய்துள்ள நிலையில் எங்கள் ஊரின் அருகிலுள்ள கிராமங்களில் முறையாக இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் பகுதிக்கு மட்டும் இதுவரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை என கூறுகின்றனர். இதனால் தற்போது கோடை உழவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் பரிதவித்து வருவதாகவும் , தாங்கள் பகுதிக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.