பெய்ஜிங்: கரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,972-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய 'கரோனா' வைரஸ் உலகில் 127 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்தனர். சீனாவில் அந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,169-ஆக உயர்ந்துள்ளது. அதையடுத்து, அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 80,796 -ஆக அதிகரித்துள்ளது. நோய்தொற்று நீங்கி படிப்படியாக உயிரிழப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இது தவிர, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட சுமார் 27 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 1,552 பேரையும் சேர்த்து சர்வதேச அளவில் அந்த வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,972 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,28,303 லிருந்து 1,34,559 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 1,000 ஆக உயர்ந்துள்ளதை அடுத்து அங்கு நாடு தழுவிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.