வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வேலூரில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 49 வயது ஆண் ஒருவர், இங்கிலாந்து நாட்டில் இருந்து அண்மையில் திரும்பி வந்துள்ளார். தொடர்ந்து அவர், குடும்பத்துடன் 28 நாட்கள் அவரது இல்லத்திலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது இல்லத்தைச் சுற்றியுள்ள சில தெருக்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன.