பொங்கல் பரிசு பெற ஜன.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை ஜனவரி 25ஆம் வரை நீட்டித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை ஜனவரி 25ஆம் வரை நீட்டித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான கடைசி நாள் ஜனவரி 13 என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜனவரி 25 வரை பெற்றுக் கொள்ள கால அவகாசத்தை நீட்டித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 4 முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு, 5 கிராம் ஏலக்காய், முந்திரி, திராட்சை தலா 20 கிராம் ஆகியன துணிப்பையில் வைத்து வழங்கப்பட உள்ளன. இத்துடன் ரூ.2,500 ரொக்கத் தொகை அளிக்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பானது தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்படுகிறது. அரிசி பெறக் கூடிய அட்டைதாரா்கள் 2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 805 பேருக்கும், இலங்கைத் தமிழா்கள் 18 ஆயிரத்து 923 குடும்ப அட்டைதாரா்களுக்கும், அரிசி அட்டைகளாக மாற்றப்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரத்து 235 அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 13ஆம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து மக்களுக்கும் விடுபாடின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பரிசு வழங்கும் தேதியை ஜனவரி 25 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் ஜனவரி 18 முதல் ஜனவரி 25 வரை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com