அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாட்டால் மாணவர்களின் மனநலன் பாதிக்கப்படுவதாக சீனாவில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சீனா, மலேஷியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வில் பெரும்பாலான மாணவர்களின் மனநலனை அவர்கள் செல்போனில் செலவழிக்கும் நேரமே தீர்மானிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் பயிலும் 622 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களில் யார் அதிகளவில் செல்போன் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதிகப்படியான மனச்சோர்வை எதிர்கொள்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதீதமான சமூக ஊடக பயன்பாடு மாணவர்களிடையே மன அழுத்தம் தொடங்கி தன்னை தானே குறைத்து மதிப்பிடுதல், அச்சம் உள்ளிட்ட சிக்கல்களுக்கு காரணமாகிறது. சமூக ஊடக நாட்டம் மட்டுமில்லாமல் செல்போன் பயன்படுத்துவதும் நோமோபோபியா (செல்போன் இல்லாமல் இருக்க முடியாத நிலை), எடை குறித்த பயம் இப்படியான பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.
ஒட்டுமொத்தமாக சமூக ஊடகங்கள் ஆபத்தானவை எனச் சொல்ல முடியாது. ஆனால் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு உதவி தேவைப்படுதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் சராசரி நேரம் 4.8 மணி நேரமாக உள்ளதாகவும் இவர்களில் 40 சதவீதம் பேர் சமூக ஊடக நாட்டம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
பொதுவாக இளைஞர்கள் தான் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள். நிறைய பேருடன் தொடர்பில் இருக்கவும் தனிமையை தவிர்க்கவும் மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இது ஒரு வகையில் அவர்களுக்கு உதவினாலும் நேரடி வாழ்வில் தொடர்புடையவர்களிடமிருந்து விலகி செல்கிற நிலையையும் உருவாக்குகிறது. அவர்களால் பயன்படத்தக்க வகையில் நேரம் செலவழிக்க இயலுவதில்லை.
மனநலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உலகளவில் அக்டோபர் 9 உலக மனநல தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மனநலன் குறித்தும் அதற்கு சிக்கல் உண்டாக்கும் காரணிகள் குறித்தும் உரையாட வேண்டியது அவசியமாகிறது.
அளவான செல்போன் பயன்பாடு, குறைவான சமூக ஊடக ஈடுபாடு உள்ளிட்டவை நம் மனநலனுக்கு உகந்தவை என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.