தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலம் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பது, உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செய்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவர்.
இந்த சாம்பல் புதனை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் புதன்கிழமை அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து அவர், திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு சாம்பலை கொண்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசினார். இதில், ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.
இதேபோன்று, தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில், மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையிலும், தூத்துக்குடி லூதம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.
மேலும், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சபைகளிலும் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.