காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஜனநாயகத்தை மோடி கொலை செய்ததை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தில்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை வெளியிடும் வலைதளக் கணக்குகளை முடக்குமாறு மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் தளத்தைக் கோரியிருந்தது.
கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கணக்குகளை முடக்குவது சரியில்ல எனத் தெரிவித்து எக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் பதிவிட்டதைச் சுட்டிக்காடி பேசிய ராகுல்காந்தி தனது பதிவில் மோடி அரசைக் கண்டித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட அவர், 'விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால், அவர்களைச் சுட்டுத் தள்ளுகிறீர்கள்! இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால் அவர்களுக்கு செவிசாய்க்க கூட மறுக்கிறீர்கள்! இதுதான் உங்கள் ஜனநாயகமா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
'முன்னாள் ஆளுநர் உண்மையை பேசினால் அவரது வீட்டை சிபிஐ மூலம் சோதனை செய்கிறீர்கள், பிரதான எதிர்கட்சியின் வங்கிக்கணக்குகளை முடக்குகிறீர்கள், 144 தடை, இணைய சேவை முடக்கம், கூர்மையான வேலிகள், கண்ணீர் புகைக்குண்டுகள்! இதுதான் உங்கள் ஜனநாயகமா?'
'ஊடகங்களாக இருந்தாலும், சமூக வலைதளங்களாக இருந்தாலும் உண்மைக் குரல்களை அடக்குகிறீர்கள் இதுதான் உங்கள் ஜனநாயகமா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
'நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்' எனக் கூறியுள்ளார்.