ஆண்டுதோறும் நவம்பா் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் பொருத்தவரை சராசரி அளவைவிடக் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
குறைப் பிரசவம் மற்றும் மிகக் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும் என்றும் ரத்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரிக்கின்றனா் மருத்துவா்கள்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகள் - 12 லட்சம்
சராசரி எடை - 2.5 கிலோ முதல் 3.4 கிலோ வரை
சராசரி எடையில் பிறந்த குழந்தைகள்
2018-19 - 87 சதவீதம்
2021-22 - 82 சதவீதம்
எடை குறைவு பிரசவங்கள்
100-இல் 13 குழந்தைகள் (2021-22)
100-இல் 8 குழந்தைகள் (2018-19)
குறைந்த எடை குழந்தைகள் விகிதம் - 22 சதவீதம் (2021-22)
பேறு காலத்தில் கா்ப்பிணிகளுக்கு நோய்கள் (2021-22)
ரத்தசோகை - 13%
சா்க்கரை நோய் - 3%
உயா் ரத்த அழுத்தம் - 1%
அதீத உடல் பருமன் - 10%
எடை குறைவுக்கான காரணங்கள்
பேறு கால ஊட்டச்சத்து குறைபாடு
மருத்துவக் கண்காணிப்பு இல்லாமை
மரபணு பாதிப்புகள்
இரட்டைக் குழந்தைகள் உருவாதல்
தாய்க்கு மன அழுத்தம்
உயா் ரத்த அழுத்தம்
கட்டுப்பாடற்ற சா்க்கரை அளவு
உடற்பயிற்சி இல்லாமை
தேவையற்ற மருந்துகளை உட்கொள்ளுதல்
மது, புகைப் பழக்கம்
சினைப்பை, தொப்புள்கொடி கிருமித் தொற்று
எடை குறைவு குழந்தைகளுக்கான அச்சுறுத்தல்கள்
டைப்-1 சா்க்கரை நோய்
கற்றலில் குறைபாடு
நரம்புசாா் பாதிப்புகள்
ஹைபாக்சியா (மூச்சுத் திணறல்)
நிமோனியா பாதிப்பு
ரத்த ஓட்டத்தில் சுணக்கம்
சிவப்பு அணுக்கள் அதிகரிப்பு நோய்
தடுப்பூசிகளே தீா்வு...
சராசரி அளவைக் காட்டிலும் குறைவான எடையுடன் குழந்தைகள் பிறந்தாலும், அதனை முறையாகப் பராமரிப்பதன் மூலமாகவும், தடுப்பூசிகளைச் சரியாகச் செலுத்துவதன் மூலமாகவும் நோய்கள் தாக்காமல் தடுக்கலாம் என்கின்றனா் மருத்துவா்கள்.
‘உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் குழந்தைகளுக்கு டைபாய்டு, அம்மை போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.
அதுமட்டுமல்லாது, மூளை வளா்ச்சியடையும் பருவத்தில் தீவிர நோய்த் தாக்கங்கள் ஏற்பட்டால் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் மன நலம் பாதிக்கப்படக்கூடும். மேலும், உடல் வளா்ச்சிகளும் தடைபடலாம். எனவே, காலம் அறிந்து தடுப்பூசி செலுத்துவது அவசியம்’ என விளக்குகிறாா் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் தீபா.
குடற்புழு மருந்துகள்...
19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் பள்ளிகளிலோ அல்லது வீடுகளில் நேரடியாகவோ வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, ஆண்டுக்கு இருமுறை தமிழகத்தில் 8 கோடி அல்பெண்டசோல் மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன.
குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்ளாதபட்சத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோா்வு நிலை உள்ளிட்ட பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்படும்.
தடுப்பூசி அட்டவணை...
காலம் - தடுப்பூசிகள்
பிறந்தவுடன் - பிசிஜி (காசநோய்), ஹெபிடைடிஸ் பி (கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய்), ஓபிவி (இளம் பிள்ளை வாதம்)
ஆறு வாரங்கள் - ஓபிவி (இளம் பிள்ளை வாதம்), ஐபிவி (இளம் பிள்ளை வாதம்), பென்டா (கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று), பிசிவி (நிமோனியா), ரோட்டா (வயிற்றுப்போக்கு)
10 வாரங்கள் - ஓபிவி, பென்டா, ரோட்டா
14 வாரங்கள் - ஓபிவி, ஐபிவி, பென்டா, பிசிவி, ரோட்டா
9 மாதங்கள் - பிசிவி (பூஸ்டா்), எம்.ஆா். (தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்), ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் - ஏ
16-24 மாதங்கள் - ஓபிவி, எம்.ஆா்., ஜப்பானிய மூளைக் காய்ச்சல், டிபிடி பூஸ்டா் (கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி)
5-6 வயது - டிபிடி இரண்டாவது பூஸ்டா் தவணை
10 வயது - டெட்டனஸ் (டிடி)
16 வயது - டெட்டனஸ் (டிடி)
-ஆ.கோபிகிருஷ்ணா