ஸ்டாலினுக்கு துரைமுருகன் அளித்த மாண்ட் பிளாங் பேனாவின் தனித்துவம் என்ன?

தனித்துவமிக்க ‘மாண்ட் பிளாங்க்’ பேனாக்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் பரிசளித்தாா்.
ஸ்டாலினுக்கு துரைமுருகன் அளித்த மாண்ட் பிளாங் பேனாவின் தனித்துவம் என்ன?
ஸ்டாலினுக்கு துரைமுருகன் அளித்த மாண்ட் பிளாங் பேனாவின் தனித்துவம் என்ன?

தனித்துவமிக்க ‘மாண்ட் பிளாங்க்’ பேனாக்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் பரிசளித்தாா். இது மிகவும் தனித்துவம் மிக்க பேனா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இதன் இதயம் போன்ற பேனா முள் தங்கத்தால் செய்யப்பட்டது என்பதே இதன் தனித்துவம்.

துரைமுருகன் அளித்த மாண்ட் பிளாங்க் நிறுவன பேனாக்கள் இணையதளங்கள் வழியே விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் விலை ரூ.50 ஆயிரத்தில் தொடங்கி ரூ.1 லட்சத்துக்கும் மேல்.

ஏன் இந்த அளவுக்கு விலையுயர்ந்ததாக இருக்கிறது இந்த மாண்ட் பிளாங் பேனா. காரணம் மாண்ட் பிளாங் பேனாக்களின் முள் 14 முதல் 18 காரட் தங்க ரிப்பனால் செய்யப்பட்டதாம். மிக நேர்த்தியான எழுத்துக்காக, மாண்ட் பிளாங் பேனாவின் முள் கையால் பாலீஷ் செய்யப்படுகிறது. இது மட்டுமல்ல, இந்தப் பேனாவின் அனைத்து பாகங்களுமே மிக விலை உயர்ந்த பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

பார்ப்பதற்கு மிக நேர்த்தியாக இருப்பது மட்டுமல்லாமல், அதன் இதர வேலைப்பாடுகளும் அதற்குரிய விலையை நியாயம் செய்கின்றன. மிகவும் நவீனத்துவத்துடன் பல்வேறு மாடல்களிலும் கிடைக்கிறது. இவ்வளவையும் தாண்டி இது பல காலம் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் உள்ளது.

1906ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அதிகளவில் விற்பனையாகும் பேனாக்களில் ஒன்றாக உள்ளது.

மிக விலையுயர்ந்த, சிறப்பு வாய்ந்த, நவீன வடிவமைப்புடன் இந்த பேனாக்கள் உருவாக்கப்படுகின்றன.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் பொதுச் செயலாளராக மீண்டும் தோ்வான பிறகு, துரைமுருகன் பேசுகையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு ஜோடி மாண்ட் பிளாங்க் பேனாக்களை அன்பளிப்பாக அளிக்கிறேன். இனி இதில்தான் அவா் கையொப்பமிட வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளை வெளியிட வேண்டும். அரிதான பொருள்களில் ஒன்றுதான் இந்த மாண்ட் பிளாங்க் பேனா. அத்தகைய பேனாவை அவருக்கு அளிக்கிறேன் என்றாா்.

இதன்பின்பு, மு.க.ஸ்டாலினை நோக்கிச் சென்று அவரது பையில் ஏற்கெனவே வைத்திருந்த பேனாவை எடுத்து விட்டு 2 மாண்ட் பிளாங்க் பேனாக்களையும் சட்டைப் பையில் சொருகினாா் துரைமுருகன். அப்போது, கூட்டத்தில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

ஒரு உண்மையான மாண்ட் பிளாங் பேனாவை எப்படி அடையாளம் காண்பது என்றால், அதன் மூடிப் பகுதியில் மாண்ட் பிளாங் பேனாக்களின் முத்திரை இடப்பட்டிருக்கும். ஒரு பேனாவின் அடையாள அட்டையில் இருக்கும் அதே கோடு எண், பேனாவின் மூடியில் இருக்கும் உலோக உருளையிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

பேனாவில் மேட் இன் ஜெர்மன் என்ற வாக்கியமும், அது தயாரிக்கப்பட்ட ஆண்டு உள்ளிட்ட விவரங்களும் மூடியில் இடம்பெற்றிருக்கும். பொதுவாக மாண்ட் பிளாங் பேனாக்களை அப்படியே துல்லியமாக போலியாக உருவாக்கினாலும் இந்த சீரியல் எண்களை அவர்களால் பொறிக்க முடியாமல் போகிறதாம். ஆனால் தற்போது அந்த சீரியல் எண்களையும் பொறித்து போலி மாண்ட் பிளாங் பேனாக்கள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com