தீபாவளி பண்டிகை என்றாலே சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் பட்டாசு வெடிப்பதுதான் பேரானந்தம். ஆனால் பட்டாசு வெடிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.
தீபாவளி பண்டிக்கைக்கு புத்தாடை உடுத்துவது, பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கு விருந்தளித்து உண்பது போன்ற கொண்டாட்டங்களுக்கு இடையே, பட்டாசு வெடித்து மகிழ்வது குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் குதூகலத்தை அளிப்பதாகும். பட்டாசுகளை வெடிப்பதால், அன்றைக்கு இல்லத்தில் பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது.
எனவே, பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் வெடிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம்.
வீட்டில் பெரியவர்களின் துணையில்லாமல் பட்டாசுகளை வெடிக்க குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. வெட்டவெளியில் பட்டாசு கொளுத்துவது பாதுகாப்பானதாகும்.
எந்த காரணத்தை முன்னிட்டும் வீட்டுக்குள், வீட்டு வாசலிலேயே பட்டாசுகளை பற்றவைக்கக் கூடாது.
கூடுமானவரை உடம்பில் படும்படியாக இறுக்கமான ஆடைகளை அணியவேண்டும். மத்தாப்புகளை கொளுத்தும்போது, உடம்பில் இருந்து தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பட்டாசுகளை பக்கவாட்டில் இருந்து கொளுத்த வேண்டும். பாத்திரங்கள், பாட்டீல்கள் அல்லது குறுகிய இடங்களில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும் போது, வெடிக்க வேண்டிய பட்டாசுகளை சட்டை அல்லது கால்சட்டை பையில் வைக்கக் கூடாது. வெப்பமான இடங்களில் பட்டாசுகளை சேமிக்கக் கூடாது.
பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால், அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது. பூந்தொட்டி பட்டாசுகளை கையில் வைத்தபடி பற்ற வைக்கக் கூடாது.
நமக்கும் மற்றவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ராக்கெட்களை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
வீண் பெருமைக்காக பட்டாசுகளை கவனக் குறைவாக வெடிக்க வைக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீரை வைத்துக்கொண்டு, எதேச்சையாக காயம் ஏற்பட்டால் அதன்மீது தண்ணீர் ஊற்ற வேண்டும்.
சிசுக்கள், முதியோர், நோயாளிகளை கவனத்தில்கொண்டு மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகம் ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தவிர்க்க வேண்டும்.
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்போம், பண்டிகையை இனிமையாக்குவோம்!