சுகம் தரும் சித்த மருத்துவம்: மூட்டு வலி, தசை வலிக்கு தீர்வு தருமா ‘சுண்டைக்காய்’..?

அலைபேசிக்கும், மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு? அப்போது வெளியில் திரிந்து விளையாடினால் மூட்டு வலியும், தசைவலியும் வராதா என்ன?
சுகம் தரும் சித்த மருத்துவம்: மூட்டு வலி, தசை வலிக்கு தீர்வு தருமா ‘சுண்டைக்காய்’..?

ஐம்பது வயதுகளில் வரவேண்டிய மூட்டு வலியும். தசைவலியும் தற்போது 30 வயதுகளிலே வந்து விடுகிறது. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடினார் மகாகவி பாரதியார். ஆனால், இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலைபேசிக்கு, இணையத்திற்கும் அடிமையாகி அதிலே பொழுதை கழிப்பதும் கூட சீக்கிரமே வரும் மூட்டுவலிக்கு மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய குறைபாட்டிற்கும் முதற்காரணமாக அமைந்து விடுகிறது. 

என்னது அலைபேசிக்கும், மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு? அப்போது வெளியில் திரிந்து விளையாடினால் மூட்டு வலியும், தசைவலியும் வராதா என்ன? என்று பலருக்கும் பட்டாசு வெடிப்பது போல படபடவென கேட்கத்தோன்றும்.

நிச்சயம் தொடர்பு உண்டு. வெயிலில் விளையாடுவதாலும், வேலை செய்வதாலும் நம் தோலின் மீது விழும் சூரிய புறஊதாக் கதிர்கள் நம் தோலிலேயே வைட்டமின்-டி எனும் அத்தியாவசியமான விட்டமினை உற்பத்தி செய்யும் தன்மை உடையன. 

இந்த வைட்டமின்-டி3 தான் எலும்புகளுக்கும், தசைகளுக்கும் வன்மை தரக்கூடியது. இந்த வைட்டமின்-டி தான் நம் உடலில் சுண்ணாம்பு சத்து என்று கூறப்படும் கால்சியம் உட்கிரத்தலுக்கும் அவசியம். அப்போது தான் நம் எலும்புகளும், மூட்டுகளும், தசைகளும் வலிமை பெறும். வைட்டமின் டி கொழுப்பில் கரையும் வைட்டமின் வகையை சார்ந்தது. இது குறைந்தால் சிறியவர்களுக்கு ‘ரிக்கட்ஸ்’ எனும் நோயும், பெரியவர்களுக்கு ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் மூட்டு தேய்மானமும் வந்தடையும் என்கிறது அறிவியல்.

‘டாக்டர் எனக்கு இந்த சின்ன வயசுலேயே மூட்டுக்கள் எல்லாம் வலிக்குது, தசைகளும் அப்பப்போ வலிக்குது, நான் முடக்கு வாதம் டெஸ்ட் வரை எல்லாம் எடுத்து பாத்துட்டேன் எல்லாம் நார்மலா இருக்குனு சொல்லிட்டாங்க, வைட்டமின்-டி 3 மட்டும் குறைவா இருக்குனு சொல்லிட்டாங்க’ நான் அந்த வைட்டமின்-டி-3 மருந்தை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்று இயற்கையாக வெயில் மூலம் கிடைக்கும் விட்டமினை பெற முடியாமல், வாரம் ஒரு முறை வைட்டமின்-டி3 பாக்கெட்டுகளை உள்கொள்ள கடினப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர். 

குளு குளு ஏர் கண்டிஷன் அறையில் முழு நேரமும் பணிபுரியும் மென்பொருள் தொழிலில் உள்ளவர்களுக்கும், வெயிலே படாமல் வேலை செய்யும் நபர்களுக்கும் இந்த பிரச்னை பொதுவான ஒன்று. வெயில் அளவு குறைவாக உள்ள வெளி நாடுகளில் வாழ்பவர்களுக்கும் இது பொருந்தும். ஆதலால் தான் அவர்கள் ‘சன் பாத்’ எனும் சூரிய குளியலை வாரம் தோறும் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அளவுக்கு அதிகமாக வெயில் கிடைத்தும், நம் நாட்டில் உள்ளவர்களுக்கு ஏன் இந்த வைட்டமின் பொடிகள் என்று தெரியவில்லை. 

நம் உடலில் கால்சியம் அளவை சீராக வைப்பதில் இந்த வைட்டமின் டி-யும் தேவை. மறுபுறம் பார்த்தால், வைட்டமின் டி-3 பற்றாக்குறை உலகையே அச்சுறுத்தும் அசுர வியாதிகளாகிய சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பல தொற்றா வியாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வுகள். இப்போது புரியும் ஏன் நடைமுறை வாழ்வில் ‘சன் பாத்’ அதிகரித்து வருகின்றது என்பது. 

சரிங்க டாக்டர் சூரிய வெயிலை தவிர்த்து இந்த வைட்டமின்-டி3 வேறு எப்படி கிடைக்கும்? என்று கேட்பவர்களுக்கு பதில் மாமிச உணவு, முக்கியமாக மீன்கள் தான். அதுவும் வைட்டமின்-டி -யை உற்பத்தி செய்யும் பாசிகளை உண்ணும் கடல் வாழ் மீன்கள் தான். அதற்கு நாம் எங்கே செல்வது? சைவ உணவு பிரியர்களுக்கு என்ன தான் வழி? சித்த மருத்துவத்தில் இந்த டி-3 குறைவுக்கு மருந்து கிடையாதா? அதுவும் எளிய மூலிகையாக இருந்தால் அனைவருக்கும் பலன் தானே என்று நலம் நாடுபவர்களுக்கு உதவக்கூடிய சித்த மருத்துவ மூலிகை தான் ‘சுண்டைக்காய்’.

‘கொத்துகத்திரி’ என்ற பெயரைக்கொண்ட சுண்டைக்காய் கத்தரிகாய் குடும்பத்தை சார்ந்தது. இதன் பலன்கள் மிகப்பெரியது. இது வயிற்றில் உள்ள புழுக்களை கொல்லவும், பசியை தூண்டவும், மார்பில் உள்ள கோழையை அகற்றவும் பல நூறு ஆண்டுகளாக தமிழ் சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், கிருமிகளை கொல்லும் தன்மையும், பினோலிக் அமிலம் வேதிப்பொருள் உள்ளதால் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும், குடல்புண்ணை ஆற்றுவதாகவும், வலி நிவாரணி மற்றும் வீக்கமுருக்கியாகவும் செயல்படக்கூடியது. 

சித்த மருத்துவத்தில் கசப்பு தன்மையுள்ள மூலிகைகள் அனைத்தும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையுடையது அந்த வகையில் கசப்பு தன்மையுள்ள இந்த சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்ல பலன் தரும் என்கிறது முதல்நிலை ஆய்வுகள். ‘சுண்டைவற்றல் சூரணம்’ எனும் பிரபலமான சித்த மருந்து வயிற்றில் உள்ள புழுக்களை கொன்று, சீரணத்தை தூண்டி கழிச்சலை நிறுத்தும் தன்மையுடையது.

பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக ரத்த விருத்தியை அதிகரிக்க சுண்டைக்காய் (அல்லது) சுண்டைவற்றல் பயன்படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு இரும்பு சத்தும், கூடவே ஜிங்க், செம்பு சத்து, கால்சியம்,மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான எண்ணற்ற தாதுஉப்புக்களுடன், இயற்கையாய் நார்ச்சத்தும், நோய் எதிர்ப்புசத்தி தரும் வைட்டமின் சி-யும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள வேதிப்பொருள்களான சபோனின்கள் மற்றும் கிளைகோசைடுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாகவும், ஆன்டிபையாட்டிக் தன்மையுடையதும் குறிப்பிடத்தக்கது.  

உடம்பில் வெயிலே படாமல் உள்ளவர்களுக்கும் வைட்டமின் டி-3 பற்றாக்குறையை நீக்க வரமாக கிடைத்த மூலிகை தான் இந்த கால்சினோஜெனிக் ஹெர்ப் ‘சுண்டைக்காய்;. நம் உடலில் எளிதில் உட்கிரகிக்க தகுந்த ‘கால்சிட்ரையால்’ என்ற செயலியல் மூலக்கூறாக வைட்டமின் -டி3, இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக, அவ்வப்போது சுண்டைக்காயை அல்லது வற்றலை குழம்பாக எடுத்துக்கொள்ள இயற்கையாக இந்த வைட்டமின் கிடைக்கும் என்பது உறுதி.

இவ்வாறு மூட்டுக்கள் வலிமையை உறுதியாக்கும் சத்துக்களை உள்ளடக்கிய கம்ப்ளீட் பேக்கஜ் மூலிகையாக உள்ளது சுண்டைக்காய். வீதிகள் தோறும் வீடு வீடாய் கூவி கூவி விற்பதாலோ என்னவோ இந்த மகத்தான சுண்டைக்காயின் மகிமைகள் மதிப்பில்லாமல் மங்கிவிட்டது. 

இனி வெயில்படமுடியாத வாழ்வியலில் இருந்து கொண்டு ஆரோக்கியத்தை தேடுபவர்கள் சுண்டைக்காயை வாங்கி பயனடைந்தால் உடலின் ஆரோக்கியம் நிச்சயம். காலம்கடந்து இன்னும் எத்தனை எத்தனை விட்டமின்கள் புதிதாய் வந்தாலும் ஆதி மருத்துவமாம், சித்த மருத்துவம் கூறிய வழக்கில் மாற்றம் இருக்காது. என்னவெனில் உணவே தான் மருந்து.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு ... +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com