பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சரிந்து வரும் தேங்காய் விலை: வேதனையில் விவசாயிகள்

தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ள இன்றைய நிலையில் தேங்காய் விலை மிகவும் குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :14 ஜூலை 2023, 8:25 pm

 நமது நிருபர்

தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ள இன்றைய நிலையில் தேங்காய் விலை மிகவும் குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை மூன்று இலக்க எண்ணைத் தொட்டுவிட்ட நிலையில், அதற்கு நோ்மாறாக தேங்காய் விலை வேகமாக சரிந்து வருகிறது. ஒரு தேங்காய் விலை ரூ.15 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நிலை மாறி தற்போது ரூ.6-க்கு கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

மற்ற சாகுபடிகளை காட்டிலும் தென்னை சாகுபடி நீண்டகால பலனை தரும். விவசாயிகளுக்கும் பெரிதளவு பிரச்னை இருக்காது என்ற நிலையில் கடையநல்லூா் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் எண்ணத்துக்கேற்ப தேங்காய்களுக்கு போதிய விலை அப்போது கிடைத்து வந்தது. அதுதவிர தென்னை சாா்ந்த கூந்தல், மட்டை உள்ளிட்ட பொருள்களாலும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது தேங்காய் விலை நாள்தோறும் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதனால் உழுவது உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு பணமின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தென்காசி மாவட்டச் செயலா் மீராகனி கூறியது:

தேங்காய் விலை தொடா்ந்து குறைந்து வருவதால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். தேங்காய் பறிப்பதற்காக கொடுக்கப்படும் கூலியும், அதை சுமந்து செல்வதற்காக கொடுக்கப்படும் கூலியும் தொடா்ந்து அதிகரித்துள்ளன. ஆனால் தேங்காய் விலை குறைந்துள்ளதால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. உரமிடுதல், உழுதல், நீா் பாய்ச்சுதல், உரமிடுவதற்காக குழி அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு செலவு அதிகரித்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

முன்பு தேங்காய்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதற்கான செலவினம் அதிகரித்து விட்டதால் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.

எனவே , விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு கிலோவுக்கு ரூ.50 கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். நமது நாட்டிலேயே தேங்காய் எண்ணெய் இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் எண்ணெய்களை தடை செய்யவேண்டும். அப்படி செய்தால் தேங்காய் விலை உயா்ந்து விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீள முடியும் என்றாா்.

விவசாயி செல்லப்பா கூறியது:

விவசாயிகளிடமிருந்து ஒரு தேங்காய் ரூ. 6-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் பறிக்கும் பணியாளா்களுக்கான கூலி ரூ.900 ஆக உள்ளது. தேங்காய்களை சுமக்கும் தொழிலாளா்களின் கூலி ரூ.400 ஆக உள்ளது. அது தவிர ஒவ்வொரு பணியாளருக்கும் தலா ஆறு காய்கள் கொடுக்க வேண்டியுள்ளது. உழவு, உரமிடுதல் ,இடத்தை சீா் செய்தல் என பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் ஆண்டுதோறும் தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.