அம்பானி – அதானி தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட விடியோவை, 24 மணி நேரத்தில் - வியாழக்கிழமை இரவு 7 மணி வரை - 49 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
தெலங்கானாவில் புதன்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இவ்வளவு ஆண்டுகளாக அம்பானி – அதானி பற்றிப் பேசிவந்த ‘இளவரசர்’ (ராகுல் காந்தி) தேர்தல் அறிவித்த பிறகு ஏன் எதுவும் பேசுவதில்லை? ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது, டெம்போவில் பணம் சென்றிருக்கிறது என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
வங்கிக் கடன்கள் தள்ளுபடி உள்பட அதானிக்கும் அம்பானிக்கும் ஆதரவாகவே நரேந்திர மோடி அரசு முடிவுகள் எடுத்துவருவதாகத் தொடர்ந்து ராகுல் காந்தியும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில், திடீரென அதானி – அம்பானிக்கு காங்கிரஸுடன் தொடர்பு இருப்பதைப் போல நரேந்திர மோடியே பேசியதால் அரசியலிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பானது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து – ஏப்ரல் 3 முதல் அதானி பெயரை 103 முறையும் அம்பானியின் பெயரை 30 முறையும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், ஏப். 8 - புதன்கிழமை இரவு 7 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலளிக்கும் வகையில் விடியோ செய்தியொன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
வெளியிட்டவுடனேயே வைரலானது இந்த விடியோ பதிவு.
பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று மோடிக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, தொழிலதிபா்கள் ‘டெம்போ’வில் பணம் அனுப்புவது குறித்து தனது சொந்த அனுபவத்தில் பிரதமா் பேசியுள்ளாரா? கறுப்புப் பணத்தைத்தான் ஒழித்துவிட்டதாகக் கூறினாரே, எங்கிருந்து இந்தப் பணம் வந்திருக்கும்? காங்கிரஸ் கட்சிக்கு அம்பானியும் அதானியும் பணம் அனுப்பினரா என்பது குறித்து விசாரிக்க சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை அவர்களிடம் அனுப்பிவைக்க பிரதமா் மோடிக்கு துணிவுள்ளதா?
வழக்கமாக, அம்பானி மற்றும் அதானி குறித்து மூடிய அறையில்தான் பிரதமா் பேசுவாா். இப்போதுதான் முதல்முறையாக அவா்களின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டுள்ளாா். பிரதமா் மோடிக்கு பயம் வந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
எக்ஸ் தளத்தில் விடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சங்களைத் தாண்டத் தொடங்கியது பார்த்தவர்களின் எண்ணிக்கை. வியாழக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி ராகுல் காந்தியின் செய்தி விடியோவை 49 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.
இதே டிரண்ட் தொடர்ந்தால், மிக அதிகளவில் பார்க்கப்பட்ட விடியோக்களின் பட்டியலில் ஒன்றாக ராகுல் காந்தியின் விடியோ இடம் பெறலாம்!
(ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டிப் பேசும் விடியோவை எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியின் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடியோவை 30 மணி நேரத்தில் 2.02 லட்சம் பேர் பார்த்துள்ளனர்).