கன்னடர் எனக் குறிப்பிட்டு ரஜினியைச் சீண்டுகிறாரா கமல்ஹாசன்? கமலின் புதிய ட்விட்டர் பதிவு!

கன்னடர் எனக் குறிப்பிட்டு ரஜினியைச் சீண்டுகிறாரா கமல்ஹாசன்? கமலின் புதிய ட்விட்டர் பதிவு!

ரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு கமல்ஹாசன் போட்ட ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on

ரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு கமல்ஹாசன் போட்ட ஒரு ட்விட்டர் பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா நியமனம் குறித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, ‘கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த ட்விட்டரை ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் கமல். அதில் அவர் ‘திரு நாகேஷ் என் குருமார்களில் ஒருவர். திருமதி ராஜ்குமார், ராஜ்குமார் அண்ணா, திருமதி சரோஜாதேவி ஆகியோர் என் நண்பர்கள். திரு ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் எனக்கு உரியவர்கள். துணைவேந்தர் விஷயத்தில் இப்படி மத்திய மாநில அரசுகள் ஒன்றை கேட்டால் இன்னொன்றை தருவது நகைப்புக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர் தேவை.’ என்றூ பதிவிட்டிருந்தார். இவர்கள் எல்லாம் கன்னடர்கள் என்று எதற்கு கமல் தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டு அதில் ரஜினிகாந்த் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். கமல் நேர்மறையாக சொன்னாலும் எதிர்மறையாகவே எடுத்துக் கொள்ளும் போக்குத் தான் கண்டனத்துக்குரியது என்கின்றனர் கமல் ரசிகர்கள்.

ஆங்கிலத்தில் வெளியான கமலின் இந்த ட்வீட் சர்ச்சைக்குள்ளானதால் இதன் தமிழ் மொழியாக்கத்தை விரைவில் கமலே வெளியிடுவார் என்கிறது கமல் தரப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com