அஸ்ஸாமின் ‘கிஸ்ஸிங் பாபா’ புதிதாகக் கிளப்பி விட்டுள்ள அற்புத முத்த டெக்னிக்! 

மோரிகாயோன் கிராம மக்களில் 95% பேருக்கு பிளாக் மேஜிக்  என்று சொல்லப்படக்கூடிய பில்லி சூனிய விவகாரங்களில் அதீத நம்பிக்கை உண்டு.
அஸ்ஸாமின் ‘கிஸ்ஸிங் பாபா’ புதிதாகக் கிளப்பி விட்டுள்ள அற்புத முத்த டெக்னிக்! 

தமிழர்களுக்கு மருத்துவ முத்தம் தெரியும்... இதென்ன புதிதாக அற்புத முத்தம்!

பெண்களே ஜாக்கிரதையாக இருங்கள். நம் நாட்டில் தான் சாமியார்களுக்கு... போலிச்சாமியார்களுக்கு என்றும் பஞ்சமே இருந்ததில்லையே! அந்த வரிசையில் முளைத்து வந்திருக்கிறார் இதோ இந்த அஸ்ஸாமின் ‘கிஸ்ஸிங் பாபா’. இவரது இயற்பெயர்  ராம் பிரகாஷ் செளஹான். 

எந்த போதிமரத்தின் கீழும் அமராமல்... சுத்த செளகர்யமாகத் தனக்குத் தானே கடவுள் பட்டம் சூட்டிக் கொண்ட இந்த பித்தலாட்ட பாபா... மகா விஷ்ணுவின் அவதாரமாகத் தன்னை அறிவித்துக் கொண்டார். அஸ்ஸாம்... மோரிகாயன் கிராமத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இந்தக் கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவிகிதம் மிக, மிகக் குறைவு. கிராம மக்களில் 95% பேருக்கு பிளாக் மேஜிக்  என்று சொல்லப்படக்கூடிய பில்லி சூனிய விவகாரங்களில் அதீத நம்பிக்கை உண்டு. அப்படியான ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு, தான், கடவுள் கிருஷ்ணரின் அவதாரமென்றும், திருமணமான பெண்களின் உடல் ஆரோக்யம் மற்றும் உளவியல் ஆரோக்யம் தொடர்பான அத்தனை பிரச்னைகளும் தீர வேண்டுமென்றால்... பிரச்னைக்குரிய பெண்கள் தன்னை அணுகி, தங்கள் மனக்குறைகளைக் கொட்டி ஒரே ஒரு அற்புத முத்தம் பெற்றுச் சென்றால் போதும்... அந்த நொடியே அவர்களது அத்தனை துயரங்களும் இருந்த இடம் தெரியாமல் அகன்று விடும் என்று கிராமத்துப் பெண்களை மூளைச்சலவை செய்து வந்திருக்கிறான் இந்த கிஸ்ஸிங் பாபா. இந்த பித்தலாட்டத்துக்கு இவனது தாய் உடந்தை. இவர்களது பொய்யை நம்பி இதுவரை பல கிராமத்துப் பெண்கள் செளஹானிடம் சென்று அந்த அற்புத முத்தத்தைப் பெற்றுச் சென்றுள்ளதாகத் தகவல்.

தன் வீட்டிலேயே மேற்படி அற்புத முத்த விவகாரத்தை அரங்கேற்ற கோயில் எல்லாம் கட்டி வைத்திருக்கிறானாம் இந்த ஆசாமி. இவன் மட்டுமல்ல, இந்தக் கிராமத்தில், தன்னைத் தானே கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றி வாழும் பலர் இருக்கிறார்கள் என்கிறது மாநிலப் புள்ளி விவரக் கணக்கீடு. அஸ்ஸாமின் பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் மோரிகாயோன் மிக மிகப் பின் தங்கிய மாவட்டமாகக் கருதப்படுகிறது. அங்கு வசிக்கும் மக்கள் கடவுள் நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் வித்யாசம் காண முடியாத அளவுக்கு அஞ்ஞானத்தில் மூழ்கியுள்ளனர். ஏனெனில் மோரிகாயோன் கிராமத்திற்கு அருகில் இருக்கும் மற்றொரு கிராமமான மாயோங் பன்னெடுங்காலமாக பிளாக் மேஜிக்கில் ஊறித்திளைத்துப் போனா ஓஜாக்களைத்(பழங்குடி மக்கள் பிரிவுகளில் ஒன்று) தன்னகத்தே கொண்டது.

தற்போது அற்புத முத்தம் மூலம் கிராமத்துப் பெண்களை வசியம் செய்து தகாத முறையில் நடந்து கொண்ட குற்றத்துக்காக ராம் பிரகாஷ் செளஹானும், அவனது தாயாரும் காவல்துறை விசாரணையில் சிக்கியுள்ளதாகத் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com