ரயில் பயணத்தையே நம்பியிருக்கும் நடுத்தர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அண்மையில் அவசரகதியாக சரியான முன்னறிவிப்பின்றி பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு. வேலைக்குப் போகவும், இதர போக்குவரத்துக்கும் பேருந்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். நடுத்திர வர்க்கத்தினர், ஏழை எளிய மக்கள் என அனைவரும் அந்தக் கட்டண உயர்வால் திண்டாடினர்.
பேருந்தைக் காட்டிலும் ரயிலில் பயணம் செய்து செலவுகளைக் கட்டுப்படுத்தலாம் என பல பேருந்துப் பயணிகள் ரயிலில் செல்லத் தொடங்கினர். பஸ்ஸை விட ரயிலில் பாதி கட்டணம் தான் என்பதால் இந்த முடிவுக்கு வந்த அவர்களுக்கு ரயில் கட்டணமும் உயரவிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னால் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது ரயில்வே நிர்வாகத்துக்கான பராமரிப்பு செலவுகள் மற்றும் இதர செலவுகளை எதிர்கொள்ள இந்தக் கட்டண உயர்வைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்துள்ளனராம். இதன் காரணமாக ஏற்கனவே ரயில்வே நிர்வாகத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிக்கை வெளியிடப்படும் என்றனர் ரயில்வே நிர்வாகத்தினர்.